’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் யார்’ என்று அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதி நிலை அறிக்கை மீதான 3-வது நாள் விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 11 மருத்துவ கல்லூரிகளைத் தந்தது அதிமுக ஆட்சி எனவும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்றும் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சேகர்பாபு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே என சொன்னார். ஆனால், அப்போது நடைபெற்ற தேர்தலில் 98 உறுப்பினர்களை பெற்று வலுவான எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து அக்கூற்றை பொய்யாக்கியவர் தான் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, நான் உங்களைப் பற்றி குறிப்பிடவில்லை. புரிபவர்களுக்கு புரியும் என குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேகர்பாபுவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவானவர் எனக் குறிப்பிட்டார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, யார் யாரை உருவாக்கினார்கள் என்பது விவாதம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் யார் ஆட்சியைப் பிடித்தவர்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்று பதில் அளித்தார். இதனால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது.
தொடர்ந்து மீண்டும் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் ஸ்டாலின் தான் என்றும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்கள் முதல்வரானார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பினார். தேவைப்பட்டால் எப்படி முதல்வரானார் என விரிவாகப் பேசத் தயார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது.