தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் பசையான பார்ட்டி; செலவுக்கு அஞ்சாதவர். ஸ்டெர்லைட் பிரச்சினையின் போது ரஜினியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து, பலியானோர் குடும்பங்களுக்கும், கலவரத்தில் காயம் அடைந்தோருக்கும் தனது சொந்தப் பணத்தில் இருந்து லட்சங்களை நிவாரணமாக வழங்கினார். இப்படி திராவிடக் கட்சிகளே மிரளும் அளவுக்கு பிரம்மாண்டம் காட்டிய ஜோசப் ஸ்டாலின், ரஜினி அரசியலுக்கு முழுக்குப் போட்டதும் திமுகவில் இணைந்தார். திமுகவில் சிறுபான்மையினர் அணியில் இருந்த ஜோசப் ஸ்டாலின், வந்த இடத்திலும் வாரி வழங்கினார். இந்த நிலையில் இப்போது அவருக்கு திமுக மீனவரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்குக் முழுமுதற் காரணம் உதயநிதி என்கிறார்கள். ஜோசப் ஸ்டாலின் தொழில்முறையாக தூத்துக்குடியில் இருந்தாலும் இவரது சொந்த ஊர் குமரி மாவட்டத்தின் முட்டம். கடந்த 21-ம் தேதி, முட்டத்தில் குமரி மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்டமான மீனவர் தினவிழாவை நடத்தினார் ஜோசப் ஸ்டாலின். இந்தத் திருவிழாவுக்கு உதயநிதி ஸ்டாலினையும் அழைத்துவந்தார். விழாவுக்கான மொத்த செலவும் ஜோசப் ஸ்டாலின் தானாம். அப்போது பேராயர் தொடங்கி கடைக்கோடி மீனவர் வரைக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்துவிட்டு அவருக்கு மீனவரணி செயலாளர் பதவி கொடுக்க சிபாரிசு செய்தாராம் சின்னவர். கனிமொழி தூத்துக்குடி எம்பி என்பதால் அவரிடமும் விசுவாசமாக இருக்கும் ஜோசப் ஸ்டாலின், எப்படியும் பிழைத்துக் கொள்வார் என்கிறார்கள் குமரி மாவட்ட திமுககாரர்கள்