தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் சிவபத்மநாபன் மீது கட்சித் தலைமைக்கு சிலர் கட்டுக்கட்டாய் புகார்களை அனுப்பினார்கள். ஆனாலும் இம்முறையும் மாவட்டச் செயலாளர் பதவியை தக்கவைக்க அனைத்துவிதமான உத்திகளையும் கையில் எடுத்தார் சிவபத்மநாபன். இதனிடையே, இவர் மீது அதிருப்தியில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்றுகூடி முன்னாள் மாவட்டச் செயலாளர் துரைராஜுவை மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு கொடுக்க வைத்தார்கள். இதில் முனைப்பாக நின்றவர் முன்னாள் அமைச்சர் பூங்கோதை. ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து தனக்கே மாவட்டச் செயலாளர் பதவியை உறுதிசெய்துவிட்டாராம் சிவபத்து. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் பத்துவின் ஆதரவாளர்கள் இப்போது அறிவாலய வட்டாரத்தில் இனிப்புக் கொடுத்து அண்ணனின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், இவருக்குப் போட்டியாக கோதாவில் இறக்கப்பட்ட துரைராஜின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப்பில் இருக்கிறது.