மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்த அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் ரிமோன், அப்பா அமைச்சரானதும் அந்த வேலையை ஓரங்கட்டிவிட்டு சொந்த ஊர் பக்கம் வந்துவிட்டார். இதனையடுத்து, எந்தப் பொறுப்பிலும் இல்லாத ரிமோனுக்கும் கட்சிக்காரர்கள் கையெடுத்தார்கள். இந்த நிலையில், உட்கட்சித் தேர்தலில் மகனை தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆக்கினார் அமைச்சர். அதன்பிறகு அப்பாவுக்கு நிகராக மகனும் இப்போது போஸ்டர்களில் பிரகாசிக்கிறார்.
கட்சிக்குள் மாத்திரமல்லாது ஆட்சிக்குள்ளும் இப்போது தனது செல்வாக்கைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார் ரிமோன். அண்மையில், குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி கலந்து கொண்ட அலுவல்முறை ஆலோசனைக் கூட்டத்தில் அப்பாவுடன் ரிமோனும் வந்து கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைவைத்து, “அமைச்சர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிக்காரரான அவரது மகனுக்கு என்ன வேலை?” என வழக்கம் போல பாஜககாரர்கள் மனோ வட்டாரத்தை வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.