அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று நடந்தது. இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நாகர்கோவில் மேயர் மகேஷும், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோதங்கராஜும் முறையே அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மகேஷும் மனோ தங்கராஜும் கூட்டணி போட்டுக் கொண்டு சுரேஷ்ராஜனின் மா.செ. பதவியை காலி செய்தார்கள். அத்துடன் உட்கட்சித் தேர்தலிலும் சுரேஷ்ராஜன் ஆதரவாளர்களை ஓரேயடியாய் ஓரங்கட்டினார்கள். இதனால் வெறுத்துப்போன சுரேஷ்ராஜன், மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு கொடுக்க விருப்பமில்லாமல் விலகிவிட்டாராம். அவரது ஆதரவாளர்கள் பலரும் அவரது வீட்டுக்கு வந்து அவரை சென்னைக்குக் கிளம்பச் சொல்லி அழுத்தம் கொடுத்தும் அசையாதவர், “தளபதியோ, அவரது உதவியாளரோ சொன்னால் மட்டும் தான் சென்னைக்குக் கிளம்புவேன்” என பிடிவாதமாய் வீட்டிலேயே இருக்கிறாராம்.
இதனிடையே சுரேஷ்ராஜன் இப்படி ஒதுங்கி நிற்பதால் அவரது ஆதரவாளர்கள் சிலரும் மேயர் மகேஷ் பேனலில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்களாம். அண்ணனின் பொறுமையை மெச்சி திமுக தலைமை அவருக்கு மாநில பொறுப்பு கொடுத்து கௌவரவிக்கும் எனச் சொல்லி தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள் சுரேஷ்ராஜன் ஆதரவாளர்கள்.