கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை) விசாரணைக்கு மாற்றியதை கடுமையாகச் சாடி இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், என்ஐஏ பாஜகவின் கிளைப் பிரிவுபோல் செயல்படு வதாகவும் விமர்சித்திருக்கிறார். இந்த நிலையில், சீமானின் நடவடிக்கைகள் குறித்து கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரணையில் இருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த ஒரு வார காலமாக இது தொடர்பான முக்கிய கோப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்தில் மிக வேகமாக நகர்ந்து வருகிறதாம்.
சீமான் தனது கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பான விவகார ஆவணங்கள் சில உள்துறை அமைச்சகத்தின் கையில் சிக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை மையப்படுத்தியே விசாரணைகள் நடக்கிறதாம். இதை நமக்குச் சொன்ன டெல்லியில் வட்டமடிக்கும் தமிழக பாஜககாரர்கள், “ஏதோ ஒரு வழக்கில் சீமானை கூடிய சீக்கிரம் வசமாக வளைக்கப் போகிறது மத்திய அரசு” என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள்!