காங்கிரஸ் பொருளாளரான ரூபி மனோகரன் எம்எல்ஏ, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் அண்மையில் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஆக்ஷனை ரத்து செய்தார். ரூபி மனோகரன் சார்ந்திருக்கும் நாடார் சமூக நிர்வாகிகள் பலரும், அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பின்பு தடாலடியாக பதவி விலகல் அஸ்திரத்தை எடுத்ததும் ரூபியை பெரிதும் காப்பாற்றியது.
ரூபி மனோகரனின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் ரத்து செய்துவிட்டாலும் நாடார் சமூகத்து புள்ளிகள் விடுவதாக இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம் சார்பில் தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்களில், ‘காங்கிரஸ் மேலிடமே! காங்கிரஸின் வாக்குவங்கி நாடார்கள். ரூபி மனோகரன் எம்எல்ஏ-வை அவமானப்படுத்தியதற்கு பரிகாரமாக அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்குக!’ என வாசகங்கள் மிரட்டுகின்றன. இதையும் ரூபி ஆதரவு வட்டாரம் உள்ளுக்குள் ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.