காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும் ஆரம்பத்தில் பலமாக அடிப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்கள் தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலைவர் பதவியும் தென்னகத்தைச் சேர்ந்தவருக்கே தரப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. அந்த வகையில் தங்களின் அன்புத் தலைவருக்கு தலைவர் பதவி கைகூடலாம் என ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால், அதற்கும் போட்டியாக மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் உள்ளிட்டவர்கள் தலைவர் ரேஸில் குதித்தார்கள். போதாக்குறைக்கு, தமிழக காங்கிரஸ் தலைகள் சிலரும் வழக்கம் போல சிதம்பரத்துக்கு எதிரான சித்து வேலைகளில் இறங்கினர். இதனால் ஒரு கட்டத்தில் ப.சிதம்பரத்தின் பெயரை பரிசீலனையில் இருந்தே எடுத்துவிட்டதாம் காங்கிரஸ் தலைமை. இந்தக் கோபத்தில்தான் சசி தரூர் உள்ளிட்ட 4 எம்பி-க்களுடன் சேர்ந்து, தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைக் கேட்டு தலைமைக்கு கடிதம் எழுதினாராம் சிதம்பரத்தின் மகன் கார்த்தி. ஆக, கைக்கெட்டும் தூரத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் பதவி கைவிட்டுப் போனதில் ப.சிதம்பரம் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.