உங்க ஆட்சியா இருந்தாலும் இங்க நாங்க தான் எம்எல்ஏ!

உங்க ஆட்சியா இருந்தாலும் இங்க நாங்க தான் எம்எல்ஏ!

மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட வெளியம்பாக்கத்தில் ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு ஆறு மாதங்களாக மூடிக் கிடந்தது. ஆளும்கட்சி இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்ததால், தொகுதியின் அதிமுக எம்எல்ஏ-வான மரகதம் குமரவேல், அதிகாரிகளிடம் பேசி இன்று அந்தக் கட்டிடத்தைத் திறந்துவைக்க வந்திருந்தார். இதையறிந்து படை திரட்டி வந்த திமுக யூனியன் கவுன்சிலர் சிவகுமார், “எங்க ஆட்சி நடக்குது... நீங்க எப்படி கட்டிடத்தை திறக்கலாம்” என மரகதத்துடன் மல்லுக்கு நின்றார். சளைக்காத மரகதத்தின் ஆட்களும், “ஆட்சி உங்க ஆட்சியா இருந்தாலும் இங்க நாங்க தான் எம்எல்ஏ. நாங்க தான் கட்டிடத்தைத் திறப்போம்” என வரிந்து கட்டினார்கள்.

இப்படி, ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் மல்லுக்கு நின்றதால் அந்த ஏரியாவே களேபரமானது. இதையடுத்து பஞ்சாயத்துக்கு வந்த உள்ளூர் தலைகள் சிலர், “பூட்டியே கிடந்த கட்டிடத்தை திறக்க வந்தங்கள ஏம்பா தொந்தரவு பண்றீங்க... வேணும்னா இன்னொரு நாளைக்கு நீங்களும் வந்து திறந்துவச்சுட்டுப் போங்க” என்று சிரிக்காமல் சீரியஸாய்ச் சொல்ல, வேறு வழியில்லாமல் ஆளும்கட்சிக்காரர்கள் அங்கிருந்து ஜகா வாங்கிக் கொண்டார்கள். இதையடுத்து, உள்ளூர் புள்ளிகளின் ஆதரவுடன் அந்தக் கட்டிடத்துக்கு ரிப்பன் வெட்டிவிட்டுப் போனாராம் மரகதம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in