மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுக்காமல் ஒதுக்கியது திமுக தலைமை. அடுத்ததாக இப்போது அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் கழற்றிவிட காய்நகர்த்திவிட்டார்களாம். மதுரை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் இப்போது ஒன்றாக்கப்பட்டுவிட்டன. ஒன்றுபட்ட மாநகர் மாவட்டத்துக்கு தன்னை செயலாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தாராம் பொன்முத்து. ஆனால், அது நடக்காத சூழல் உருவாகி இருக்கிறது. இந்த விஷயம் அறிந்து பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் போய் முறையிட்டாராம் பொன்ஸ். இவருக்காக அனுதாபப்பட்ட துரைமுருகன், “சீனியர்களை ஓரேயடியாக ஒதுக்கிவிடமுடியாது. அவர்களுக்கும் நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” என ஸ்டாலினிடமே பேசினாராம். ஆனாலும் பொன்முத்துவுக்கு பாசிட்டிவான சூழல் அமையவில்லை. இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவியைப் பிடிக்க மாநில மாணவரணி துணை அமைப்பாளரான அதலை செந்தில்குமார் என்பவர் பெரும்பணம் செலவழித்துவிட்டாராம். இவருக்கும் தற்போதைய தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதிக்கும் தான் இப்போது போட்டியாம். பொன்முத்து கோதாவிலேயே இல்லை என்கிறார்கள். அநேகமாக பொன்முத்து மீண்டும் மாநில பதவிக்கு சிபாரிசு செய்யப்படலாம் என்கிறார்கள். இதைவிட கூத்து என்னவென்றால், ‘ஆல் பார்ட்டி மெம்பர்’ என கிண்டலடிக்கப்படும் பாஜக வரவான டாக்டர் சரவணனும் இந்தப் பதவிக்காக தூண்டில் வீசிப் பார்த்தாராம். அது நடக்காது என்றதும் சைலண்ட் ஆகிவிட்டாராம்.