அமைச்சர் கே.என்.நேரு மீது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றுதலும் எப்போதும் இருக்கும். அதற்குக் காரணம், கொடுக்கும் காரியத்தை எதிர்பார்ப்பதற்கும் மேலாக செவ்வனே நடத்திக்காட்டி சபாஷ் பெறுபவர் நேரு. அப்படிப்பட்ட நேரு மீது ஸ்டாலின் இப்போது வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நேரு சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்தால் நேருவின் அமைச்சர் பதவிக்கே ஆபத்து வரலாம். இதை மனதில் வைத்து, வழக்கை ‘திறம்பட’ நடத்தி முடிக்க தன்னால் இயன்றவரை தனியாகவே முயன்று வருகிறாராம் நேரு. இது தொடர்பாக, திமுக குடும்பத்து வாரிசு மூலமாக டெல்லியிலுள்ள பாஜக தலைகளிடம் டீல் பேசப்பட்டதாக நேருவுக்கு வேண்டாத வர்கள் பக்குவமாய் ஸ்டாலின் காதில் ஓதிவிட்டார்களாம். இது தொடர்பாக, ஸ்டாலின் நேருவை அழைத்து விசாரித்ததாகவும் இதன் பிறகுதான் அவர் மீது ஸ்டாலின் வருத்தத்தில் இருப்பதாகவும் அறிவாலயப் புள்ளிகள் பேசிக்கொள்கிறார்கள்.