
"நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று பயப்படாமல் பகிங்கரமாக அறிவித்திருக்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்.
கடந்த 5-ம் தேதி, பெரம்பலூர் ஆட்சியர் கற்பகத்தை சந்தித்த பாரிவேந்தர் நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, தாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருப்பதாகவும், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலேயே தொடரப்போவதாகவும் பகிங்கரமாக தெரிவித்தார் பாரிவேந்தர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற பாரிவேந்தர், இன்னமும் திமுக உறுப்பினராகவே நாடாளுமன்றத்தில் தொடர்கிறார். இந்த நிலையில், தாங்கள் பாஜக கூட்டணியில் இருப்பதாக அவர் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் தொகுதியின் அறிவுஜீவிகள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். அதைவிட, “லட்டு மாதிரி ஜெயிக்க வேண்டிய இந்தத் தொகுதிய இவங்க கையில தூக்கிக் குடுத்துட்டு இப்ப இந்த மாதிரியெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க வேண்டியது இருக்கு பாருங்க” என்று நொந்து கொள்கிறார்கள்.