ஓபிஎஸ் - ஈபிஎஸ் அதிகார யுத்தத்தில் பல மாவட்டங்களிலும் முன்னாள் எம்எல்ஏ-க்கள், ஒன்றிய செயலாளர்கள் என பலரும் ஓபிஎஸ் பக்கம் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அப்படி யாரும் ஓபிஎஸ் பக்கம் நகரவில்லை. அதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்கிறார்கள். விஜயபாஸ்கரின் கட்டுக்கோப்பை உடைத்து புதுக்கோட்டையிலும் தன் பக்கம் ஆட்களை இழுப்பதற்காக அங்கே மூன்று மாவட்ட செயலாளர்களை நியமித்திருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், அந்த பிளானை எல்லாம் தனது அன்பான அணுகுமுறையால் முறியடித்து வருகிறார் விஜயபாஸ்கர். மாவட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்திக்கும் இடத்திலெல்லாம், இதற்காக தனியாக டியூஷன் எடுக்கும் விஜயபாஸ்கர், “அதிமுக என்றால் அது எடப்பாடிதான். கட்சி அவரிடம்தான் இருக்கு, அவரால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். நாமும் அவரோடதான் இருக்கணும். ஓபிஎஸ் எல்லாம் தாக்குப்பிடிக்க மாட்டார்” என்று உள்ளம் தொட்டுப் பேசி, ஊசலாட்டத்தில் இருப்பவர்களையும் உள்ளே இழுத்துப்போடுகிறாராம்.