ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் அண்மைக் காலமாக கடத்தல் பொருட்கள் அதிகம் பிடிபட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரே கோடிட்டுக் காட்டுமளவுக்குப் போய்விட்டது இந்தக் கடலோரக் கடத்தல் சமாச்சாரங்கள். தீவுப் பகுதியில் கடத்தல் நடப்பது காலங்காலமாக இருப்பது தான் என்றாலும், சமீபத்திய போலீஸ் நடவடிக்கைகள் இந்தக் கடத்தல் சமாச்சாரங்களை வீதிக்குக் கொண்டு வந்தன. இதற்குக் காரணம், ராமேஸ்வரம் டிஎஸ்பி-யான தனஞ்செயன் என்கிறார்கள்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக இங்கு பொறுப்பேற்ற தனஞ்செயன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கடத்தல் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. கடத்தல் புள்ளிகள் தொடச்சியாக கைதும் செய்யப்பட்டார்கள். கடத்தல் பொருட்களும் கையும் களவுமாக பிடிபட்டன. இதையடுத்து , ‘மாதம் 3 லட்சம்’ என தனஞ்செயனுக்கே தூதுவிட்டுப் பார்த்தார்களாம் கடத்தல் பார்ட்டிகள். அவர் அதற்கு மசியவில்லை என்றதும் அந்த பேரத்தை பேசவேண்டிய இடத்தில் பேசி, வந்த ஐந்தே மாதத்தில் டிஎஸ்பி-யை சிவகாசிக்கு தூக்கியடிக்க வைத்துவிட்டார்களாம்!