காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏ-வுமான ரூபி மனோகரனுக்கும் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. மனோகரனை பொருளாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இருபதுக்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் ஒரு தகவல் தடதடக்கிறது. இந்தசமயத்தில் நெல்லை காங்கிரஸில், விட்ட இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் வேகம் காட்டுகிறார் முன்னாள் எம்பி-யான தனுஷ்கோடி ஆதித்தன்.
ஜனவரியில் ஆதித்தன் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. இதையொட்டி அவருக்கு பொன்விழா கொண்டாட ஆயுத்தமாகி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்களையும் இந்த விழாவுக்கு அழைக்கப் போவதாக ஆர்ப்பரிக்கிறார்கள்.
கடந்த முறை திமுகவுக்கு விட்டுக் கொடுத்த நெல்லை மக்களவைத் தொகுதியை இம்முறை கேட்டுப் பெறும் திட்டத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ். இதைத் தெரிந்துகொண்டே நெல்லை காங்கிரஸ் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கிறாராம் தனுஷ்கோடியார். அதன் முன்னோட்டமே இந்த பொன்விழா கொண்டாட்ட தடபுடல்களாம்!