அண்மைக் காலமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர்களை அதிரடியாக பேசிவந்த பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது தனது அணுகுமுறையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்.
“அறிவாலயத்தின் அடிமைகள்... அறிவாலயத்தில் 100, 200 பணம் வாங்குபவர்கள்... மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள்...” என்றெல்லாம் பத்திரிகையாளர்களை வாய்க்குவந்தபடி அண்ணாமலை வசைபாடியது பெரும் சர்ச்சையானது. தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பத்திரிகையாளர் கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் அண்ணாமலையின் இந்த அநாகரிக பேச்சுகளுக்கு அர்ச்சனைகள் விழுந்தன. இதையடுத்து தற்போது மீண்டும் பத்திரிகையாளர்களிடம், “அண்ணா” மந்திரத்தை ஓத ஆரம்பித்திருக்கிறார் அண்ணாமலை.
நேற்று கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அண்ணாமலை, சீர்காழி அருகே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது , “அண்ணா நீங்க பத்திரிகையாளரா... அண்ணா இப்படி வந்துருங்க... அண்ணா மன்னிச்சிடுங்க... என்று தன்னைக்காட்டிலும் இளைய பத்திரிகையாளர்களையும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று விளித்து அசத்தினார் அண்ணாமலை. நாளும் தொடரட்டும் இந்த நயத்தகு மாற்றம்!