பேனா நினைவுச் சின்னம்
பேனா நினைவுச் சின்னம்பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக திமுகவினருக்கு தலைமை போட்ட உத்தரவு

‘பேனா’ விஷயத்தைப் பேச திமுகவினருக்குத் தடை!

“எங்களது எதிர்ப்பை மீறி கடலுக்குள் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னத்தை நிறுவினால் அதை உடைப்போம்” என்று சீமான் போன்றவர்கள் எகிறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ஆளும்கட்சி அமைதி காக்கிறது. காரணம், தலைமை போட்ட தடையுத்தரவு என்கிறார்கள்.

மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக, மத்திய அரசின் அறிவுறுத்தல்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. சீமான் மற்றும் பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என செய்திகள் கசிந்ததை அடுத்து ஆளும்கட்சி தரப்பில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஆதரவு தெரிவித்து பேசுவதற்காக ஆட்களைத் திரட்டினார்களாம்.

பேனா நினைவுச் சின்னம் - கருத்துக்கேட்பு கூட்டம்
பேனா நினைவுச் சின்னம் - கருத்துக்கேட்பு கூட்டம்பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமானும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழல் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இவர்களைச் சமாளிக்க மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தயார்படுத்தியதாம் திமுக. இப்படி திரட்டப்பட்டவர்கள் அனைவரும் சீமான் உள்ளிட்டவர்கள் பேசும்போது கூச்சல் போட்டு எதிர்ப்பைக் காட்டினார்கள்.

ஆனால் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டி அனுப்பிய திமுக, சமூகவலைதளத்தை சமாளிப்பதில் கோட்டைவிட்டுட்டது. அதனால் அவர்களே எதிர்பாராத வகையில் ட்விட்டரில் ‘பேனா நினைவு சின்னம் வேணாம்’ என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இப்படி இந்த விஷயத்தை ட்ரெண்ட் ஆக்கியதில் செஞ்சட்டை தோழர்களின் பங்கும் இருப்பதாக ஆளும் கட்சி சந்தேகிக்கிறதாம்.

இந்த நிலையில், ‘பேனா’ விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட நினைக்கும் திமுக தலைமை, “பேனா விஷயம் தொடர்பாக யாரும் எந்தக் கருத்தும் சொல்ல வேண்டாம். இது விஷயமாக ஊடகங்களிலும் பேசவேண்டாம்” என திமுகவினருக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in