அரசியல் தலைவர்களின் `ஹோலி' குதூகலம்

2 வருடத்திற்கு பின் உற்சாக கொண்டாட்டம்
ஹோலி குதூகலத்தில் ஜே.பி.நட்டா...
ஹோலி குதூகலத்தில் ஜே.பி.நட்டா...

கரோனா பரவலால் 2 வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்ட ஹோலி பண்டிகை கொண்டாட்டம் இன்று உற்சாகமாக நடைபெற்றது. வட மாநிலங்களின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுக்குள், பலவர்ணங்களை பூசி மகிழ்ந்தனர்.

இந்தியா முழுவதிலும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலியில், பலவர்ண தூள்களை வீசியும், வர்ணங்களை பீச்சி அடித்தும் மக்கள் கொண்டாடினார்கள். இதில் வட மாநிலங்களின் அரசியல்வாதிகளும், மாநில முதல்வர்களும் தனித்திருக்கவில்லை. தங்களுக்குள் இனிப்புகளை பறிமாறி உண்டு மகிழ்வதும் வழக்கம். பொதுமக்கள், அரசியல் தலைவர்களும் தங்களுக்குள் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டு மகிழ்வதும் உண்டு. வட இந்தியாவை வாட்டியக் குளிர் முடிந்து வசந்த காலத்தை துவங்கும் வகையில் இந்த ஹோலி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை தீபாவளி போல் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ‘ஹோலிகா தெஹன்’ என அழைக்கப்படும் விறகு குவியலை நேற்று நள்ளிரவில் எரித்த பின் துவங்கியது.

உத்தரப்பிரதேசத்தில் கிருஷ்ணஜென்மபூமியாகக் கருதப்படும் மத்துராவில் பிரசித்து பெற்றது இந்த ஹோலி. மத்துராவின் பிருந்தாவனில் கிருஷ்ணன் தன் லீலைகள் நடத்திய இடமாகக் கருதப்படுகிறது. இதனால், அங்கு ஹோலி சுமார் பத்து நாட்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். பிருந்தாவனின் புகழ்பெற்ற ’பாங்கே பிஹாரி’ கிருஷ்ணன் கோயிலில் பலவர்ணங்களிலான செயற்கை மழை கொட்டி கொண்டாடப்படும் ஹோலி உலகப் புகழ் பெற்றது.

மத்துராவின் பர்ஸானாவில் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து கொண்டாடும் ஹோலி மிகவும் ரசிக்கக் கூடியது. இதில் புகுந்து பெண்களின் கைகளால் தடி அடிகளை பெற இளம் வயது ஆண்கள் அதிகம் முந்துவது உண்டு. இதன் முன்னதாக ஒரு பண்டிதர் பூஜைகள் செய்து அவர்கள் தலையில் சற்று கனமான துணிப்பைகளை வைத்து கட்டி விடுவார்கள். இதனால், அவர்கள் தலைகளில் காயம் படாமல் இருக்கும்.

மத்துராவின் மூன்று நகரங்களிலும் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையை காண பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருவது உண்டு. இந்த பண்டிகைக்காக தங்களுக்குள் வாழ்த்து சொல்ல அரசியல் தலைவர்கள் சந்திப்புகளும் மாலையில் நடப்பது உண்டு. அப்போது அவர்களும் நிறங்களை பூசி ஹோலி கொண்டாடத் தவறுவதில்லை. இதற்காக டெல்லியில் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும் தம் தலைவர்களுடன் ஹோலியை கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

மணிஷ் சிசோடியா
மணிஷ் சிசோடியா

டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தன் இல்லத்தில் நண்பர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருடன் ஹோலி கொண்டாடினார். அவரை வாழ்த்த வந்த பொதுமக்களுடனும் இணைந்து துணை முதல்வர் சிசோடியா, நடனமாடி மகிழ்ந்தார். காங்கிரஸின் மூத்த தலைவரும் உத்தராகண்டின் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ரவாத்தும் ஹோலி கொண்டாடினார். தலைநகரான டெகரடூனில் உள்ள அவரது இல்லத்தில் ரவாத்தை கட்சியினர் பலரும் சந்தித்து மகிழ்ந்தனர். தற்போது முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தன் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியையும் அவர் மேளம் அடித்தபடி மறந்திருந்தார்.

டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வீயையும் ஹோலி கொண்டாட்டம் விட்டு வைக்கவில்லை. தனது அரசு குடியிருப்பில் தன்னை காணவந்த பாஜகவினருடன் இணைந்து அவர் ஹோலி கொண்டாடினார். பலவர்ணங்களை பூசி, மேளதாளத்தை மத்திய அமைச்சர் நக்வீ அடித்து மகிழ்ந்தார். உபியின் ஷியா பிரிவு முஸ்லீம்களின் தலைவராகக் கருதப்படுபவர் அமைச்சர் நக்வீ. இருப்பினும், ஹோலியானது சாதிமத பேதம் இன்றி கொண்டாட்டத்தில் ஒன்றாகி விடுகிறது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங்கும் தனது டெல்லி அசோகா சாலையின் அரசு வீட்டில் ஹோலி கொண்டாடினார். இவரது ஆதரவாளர்கள் அமைச்சருக்கு பலவர்ணத் திலகமிட்டு வாழ்த்து கூறினர். உபியின் முன்னாள் முதல்வருமான ராஜ்நாத்சிங்கிற்கு வாழ்த்து கூற அம்மாநிலத்திலிருந்தும் பாஜகவினர் வந்திருந்தனர்.

சிவராஜ்சிங் சவுகான்
சிவராஜ்சிங் சவுகான்

மத்தியபிரதேசத்தின் பாஜக முதல்வரான சிவராஜ்சிங் சவுகானும் தனது அரசு இல்லத்தில் ஹோலி கொண்டாடினார். தன்னை காணவந்த பொதுமக்கள் மீது வர்ணங்களை பூசி மகிழ்ந்தார் முதல்வர் சவுகான். இத்துடன் பொதுமக்கள் அடித்த மேளதாளங்களுக்கு முதல்வர் சிவராஜ்சிங் ஆடி வியக்க வைத்தார். டெல்லியின் பாஜக தலைமையகத்தில் ஹோலி கொண்டாடப்பட்டது. இங்கு அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியினர் கொண்டாடினர்.

முக்தார் அப்பாஸ் நக்வீ
முக்தார் அப்பாஸ் நக்வீ

ஹோலிகாவின் புராண வரலாறு

ஹோலிகாவின் புராண வரலாற்றுப்படி, விஷ்ணு பக்தனான சிறுவன் பிரகலாதனைக் கொல்ல பல வழிகளை கடைப்பிடிக்கிறார் அவரது தந்தை இரண்யன். இதன் ஒரு கட்டமாக பிரகலாதனை தீயில் இட்டுக் கொளுத்த உத்தரவிடுகிறார். அப்போது தீம்பிழம்புகளில் இருந்து தப்பி ஓடி விடாமல் இருக்க, இரண்யனின் சகோதரியும் அரக்கியுமான ஹோலிகா, பிரகலாதனை தன் மடியில் ஏந்தி அமர்ந்து கொள்கிறார். காரணம், தன்னை தீ ஒன்றும் செய்யக் கூடாது என்ற வரம் பெற்றவராம் இந்த ஹோலிகா. ஆனால், ஹோலிகா கருகி சாம்பலாகிவிட அந்த தீ, பிரகலாதனை ஒன்றுமே செய்யவில்லை. இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஹோலி பண்டிகையின் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரிலும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது.

கொண்டாடப்படும் விதம்

இதற்காக, ஹோலி பண்டிகைக்கு பத்து நாட்கள் முன்பாக நகரம் முதல் சிறிய கிராமம் வரை உள்ள முக்கியமான முற்சந்தி மற்றும் நாற்சந்திகளில் மரம் செடி கொடிகளை வெட்டி குவிக்கிறார்கள். பிறகு இதற்கு நாள்தோறும் அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் வந்து பூஜை செய்து வணங்கியும் வருவார்கள். கடைசியாக ஹோலிப் பண்டிகை அன்று விடியலில் ஒரு குறிப்பிட்ட நேரம் குறித்து பூஜை செய்த பின் அதை எரித்து விடுவார்கள். அது தீ ஜுவாலைகளுடன் கொளுந்து விட்டு எரியும் போது மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பதுடன், அந்த தீயை தம் வீட்டிற்கு எடுத்து சென்று புதிதாக அடுப்பை மூட்டுவார்கள்.

தீபாவளியைவிட முக்கியமாகக் கருதப்படும் இந்த ஹோலி பண்டிகைக்காக குறைந்தது இரண்டு நாள் அரசு விடுமுறையாக விடப்படுகிறது. அதிலும் இந்தவருடம் ஹோலியை தொடர்ந்து சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களும் வந்துள்ளன. எனவே, நான்கு நாட்கள் ஹோலி கொண்டாட்டத்தில் வட இந்தியா மூழ்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in