'கடைசி பந்தில் சிக்சர் அடிப்போம்'... நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

‘‘நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கவலைப்பட தேவையில்லை. கடைசி பந்தில் நாங்கள் சிக்சர் அடிப்போம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது. முதலில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், ‘‘மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மவுனமாக இருக்கிறார். மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும்’’ என்றார். தொடர்ந்து திமுகவின் டி.ஆர்.பாலு மற்றும் பல கட்சிகளின் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். நாளை வரை விவாதம் நடக்கிறது. பின்னர், விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்நிலையில், பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”இந்தியா கூட்டணியில் அவநம்பிக்கை நிலவுகிறது. தங்களோடு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இதை நமக்கான வாய்ப்பாக கருத வேண்டும். 

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கவலைப்பட தேவையில்லை. நாம் கடைசி பந்தில் சிக்சர் அடிப்போம். ஊழல் இல்லாத இந்தியா, வாரிசு அரசியல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. வாக்குவங்கி அரசியல், ஊழல் அரசியல், வாரிசு அரசியலில் ஈடுபட்டு வரும் இந்தியா கூட்டணி தலைவர்களால் சமூகநீதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மீதான வாக்கெடுப்பு குறித்து சிலர் கூறும்போது, வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி போட்டி என்று வர்ணித்தனர். இந்த அரையிறுதி போட்டியில் பாஜக கூட்டணி மிக எளிதாக வெற்றி பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in