`உங்கள் செயல் கீழ்த்தரமாக உள்ளது'- ஓபிஎஸ்-க்கு எதிராக நீதிபதி காட்டம்!

`உங்கள் செயல் கீழ்த்தரமாக உள்ளது'- ஓபிஎஸ்-க்கு எதிராக நீதிபதி காட்டம்!

”நீதித்துறையை கலங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட வேண்டாம். வழக்கு தொடர்பாக நான் தெரிவித்த கருத்து திருப்தி இல்லையென்றால், அதைத் திருத்தம் செய்யக்கோரி தன்னிடமே அணுகி இருக்கலாம்” என உயர் நீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கைத் திங்கட்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்த வழக்கு தொடர்பாகத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எந்த மாதிரியான கடிதம் கொடுத்துள்ளீர்கள் என நீதிபதி, ஓபிஎஸ் வழக்கறிஞரிடம் கேட்டறிந்தார். ஜூலை 11-ம் தேதி நீங்கள் பிறப்பித்த உத்தரவில் வழக்கு தொடர்பில்லாத ஓபிஎஸ்-க்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “உங்கள் கருத்து நீதிமன்றத்தையும் கலங்கப்படுத்தும் வகையிலும் கீழ்த்தரமாகவும் உள்ளது. நீதித்துறையைக் கலங்கப்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டாம். இந்த வழக்கு தொடர்பாக நான் தெரிவித்த கருத்து திருப்தி இல்லையென்றால், அதைத் திருத்தம் செய்யக்கோரி தன்னிடமே அணுகி இருக்கலாம். உத்தரவில் திருப்தி இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ள நிலையில், நீதிபதியை மாற்றக் கோருவது கீழ்த்தரமாக இருக்கிறது” என ஓபிஎஸ் தரப்பினருக்குக் கண்டனம் தெரிவித்தார். அதே வேளையில் இந்த வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in