காங்கிரஸ் கட்சியிலிருந்த போது கிடைத்த ஆதரவை விட தற்போது தனக்கு அதிக அளவிலான ஆதரவு உள்ளது என அக்கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியிலிருந்து கடந்த 26-ம் தேதி விலகினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்துவிட்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை அவர் கட்சியிலிருந்து விலகியதற்குக் காரணமாக முன் வைத்தார்.
மேலும், ‘மோடி மனிதாபிமானமாவர்’ என மோடிக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்திருந்தார். அவருக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீரிலிருந்து பல மூத்த காங்கிரஸ் பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகி குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க உள்ளதாக, காஷ்மீர் பண்டிட்களை மீண்டும் மறுகுடியமர்த்த போராடப்போவதாகவும், அதற்கான வேலைகளைத் தான் தொடங்கப் போகும் கட்சி செய்யும் எனவும் தெரிவித்திருந்தார் குலாம் நபி ஆசாத்.
இந்நிலையில் தொடர்ச்சியாக ஜம்முவில் உள்ள மக்களையும், அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து வருகிறார். “நான் எந்த கட்சியைத் தொடங்கினாலும் அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். காங்கிரஸிலிருந்த போது கிடைத்துள்ள ஆதரவை விட தற்போது எனக்கு அதிக ஆதரவு மக்களிடையேயும், அரசியல் தலைவர்களிடையேயும் உள்ளது. காங்கிரஸிலிருந்த போது வந்த கூட்டத்தை விட தற்போது நான்கு மடங்கு அதிகமானவர்கள் வருவார்கள்” என்றார்.