"துணைவேந்தர்கள் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அதற்கு முழு பொறுப்பு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தான்" என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். அப்போது, ஆளுநராக இருந்தவர் பன்வாரிலால் புரோஹித். அந்த நேரத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினார். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பஞ்சாப் மாநில ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் புரோஹித், "தமிழ்நாட்டில் நான் 4 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றினேன். பஞ்சாபை விடத் தமிழகத்தின் நிலை மிகவும் மோசம். தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தகுதி இல்லாதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால் நான் தலையிட்டு 27 பல்கலைக்கழக துணைவேந்தர்களை சட்டப்படி நியமித்தேன்" என்று கூறினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இந்த பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த புகாரை மறுத்துள்ளார் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன். தர்மபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``துணைவேந்தர்கள் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. இதில் தவறு நடந்திருந்தால் அதற்கு முழு பொறுப்பு ஆளுநர்தான். துணைவேந்தர் நியமனத்தில் அதிமுக அரசுக்கும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்திருந்தால் அவர் சொல்வதை ஏற்கலாம். 27 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்ததாக பன்வாரிலால் புரோஹித் கூறுகிறார். இதில் அரசின் தலையீடு ஏதுமில்லை. துணைவேந்தர்கள் நியமனத்தில் பணம் கைமாறி இருந்தால் அது முன்னாள் ஆளுநரையே சாரும்" என்றார்.