
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக உள்ளார். அவருக்கு நேற்று நள்ளிரவு 12.05 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் விடுத்தவர் டெல்லி கேட்டில் உள்ள குருநானக் கண் மையத்தில் பணிபுரிபவர் என்று தெரிய வந்தது. அத்துடன் 38 வயதான அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. அவர் தற்போது குலாபி பாக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.