`அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்து'- ஆபாச சித்தரிப்பால் கொந்தளித்த காயத்ரி ரகுராம்

`அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்து'- ஆபாச சித்தரிப்பால் கொந்தளித்த காயத்ரி ரகுராம்

ஆபாசமாக சித்தரித்து பதிவிடும் தமிழக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் நடிகை காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார். அண்ணாமலை தலைமை பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் மட்டுமின்றி பெண்களுக்கும் ஆபத்தானது என்று கூறியிருக்கிறார்.

பாஜகவில் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமை கடந்த டிசம்பர் மாதம் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கி வைப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகினார்.

ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம்
ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம்

இந்த நிலையில் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் படி அவரது யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி தவறாகப் பேசி வருவதாக காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், "அண்ணாமலையின் அறிவுறுத்தலின் படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறது. வதந்திகளை கண்டு நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைத்தால், என்னை மன்னிக்கவும், நான் பயப்படவில்லை" என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், "நீங்கள் என்னைப் பற்றி பரப்பும் வதந்திகளை என் தாயும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணின் தாயும் உங்களை சபிக்க விரும்பாவிட்டாலும், அறியாமல் வரும் சாபம் ஆபத்தானது என்று சிந்தியுங்கள். உங்கள் தவறுகளுக்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் கர்மாவை எதிர்கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட மனித தாக்குதல் எனது கேள்விகளிலிருந்தும், எனது சவாலிலிருந்தும் திசை திருப்புவதற்காக மட்டுமே என்பதை நான் புரிந்து கொள்கிறேன்" என கூறியுள்ளார். இதனிடையே, தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிடும் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது ஆன்லைன் மூலம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில், "அண்ணாமலை வார்ரூம் மற்றும் அவரைப் பின் பற்றுபவர்களுக்கு மார்பிங் திறன்களைப் பயிற்றுவிப்பது போல் தெரிகிறது. அண்ணாமலை தலைமை பாஜகவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், மட்டுமின்றி பெண்களுக்கு ஆபத்தானது" என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக நேரடியாகவும் காயத்திரி ரகுராம் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in