தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்ற பாஜக மற்றும் இந்து முன்னணியினர் 33 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் விநாயகர் சதூர்த்தியை ஒட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று திருவான்மியூர், காசிமேடு, பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. குறிப்பாக எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏற்கெனவே ஊர்வலமாக செல்லக்கூடிய பாதைகளை போலீஸார் வழிவகுத்து வைத்திருந்தனர். அதிலும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை பகுதி பதற்றமான பகுதியாக கண்டறியப்பட்டு அந்த சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பின் பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில் மாநில தலைவர் இளங்கோவன், பாஜக விளையாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 33 பேர் தடையை மீறி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். இதனால், தடையை மீறி ஊர்வலமாக சென்றதாக 33 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, தடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்றதாக இந்து முன்னணி மாநில தலைவர் இளங்கோவன், மாநில செயலாளர் மனோகரன், முருகானந்தம், பாஜக விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 33 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் ஜாம்பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.