முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா காலமானார்

முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார். அவருக்கு வயது 76.

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரும் திமுக தேர்தல் பணிக் குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையாவுக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நெல்லையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி மதுரைக்கு வருகை தந்தார். அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சேடப்பட்டி முத்தையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடமும் சேடப்பட்டி முத்தையாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2006-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா, திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார். 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. 1999-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இளைய மகனான மணிமாறன் தற்போது திமுக மதுரை தெற்கு மாவட்ட புறநகர் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in