
இன்று ஒரத்தநாட்டில் சசிகலாவை சந்தித்தது தற்செயலானது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், "ஒரத்தநாடு அருகே இன்று நானும், சசிகலாவும் சந்தித்து கொண்டது தற்செயலாக நடந்த விஷயமாகும்.
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். அதுதான் எனது எண்ணமும் கூட. அனைவரும் என்பதில் சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் அடங்குவர்.
சசிகலாவையும், டி.டி.வி தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார், எப்படி அரசியலுக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கட்சியை அபகரிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் ஆணவப் போக்குக்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார்.
அதிமுக அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் காணாமல் போய்விட்டது என முதலில் அவர்கள் கூறட்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். இதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் எண்ணம். அந்த எண்ணத்தை தான் நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.