`ஈபிஎஸ்-க்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது'- இப்படி ஆர்.பி.உதயகுமார் சொல்ல காரணம் என்ன?

`ஈபிஎஸ்-க்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது'- இப்படி ஆர்.பி.உதயகுமார் சொல்ல காரணம் என்ன?

``மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது'' என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரை, டி. குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஓபிஎஸ்ஸிடம் பலகட்ட பேச்சுவார்த்தையை மூத்த நிர்வாகிகள் நடத்தினர். ஆனால், அவற்றை உதாசீனப்படுத்தி தூக்கி எறிந்துவிட்டார். தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தைக் கேட்காமல் இருந்ததால் தற்போது அவர் அரசியலில் அனாதையாகிவிட்டார். உண்மையான அதிமுக நாங்கள் தான் என நிரூபிக்கும் வகையில் 75 மாவட்டங்களிலும் வருகிற 25-ம் தேதி திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த உள்ளோம்.

வரும் காலங்களில் துரோகத்திற்கும், எதிரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். குடியரசுத் தலைவர் பிரிவு உபசார விழாவிலும், புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், அதிமுகவின் பொதுச்செயலாளராக, ஒற்றை முகமாக கலந்துகொள்ள மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1.5 கோடி கட்சி தொண்டர்களின் இதயமாக விளங்கும் தலைமை கழகத்தை காலணியால் மிதித்தனர். திமுகவும் இதற்கு உடந்தையாக இருந்து, வருவாய்த்துறை மூலம் சீல் வைத்தது. இந்த வன்முறையால் தொண்டர்கள் கண்ணீர் விட்டனர். தொண்டர்களின் கண்ணீரை துடைக்கும் வண்ணம் சீலை அகற்றி, ஈபிஎஸ்ஸிடம் தலைமைக் கழகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவாக உள்ளது. இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in