
டெல்லியில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாந்தி பூஷண் காலமானார். அவருக்கு வயது 97.
1925-ம் ஆண்டு பிஜ்னோர் நகரத்தில் பிறந்த சாந்தி பூஷண் , கடந்த 1977-1979-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். புகழ்பெற்ற சட்ட நிபுணரான இவர், பொதுநலம் சார்ந்த பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.
ரஃபேல் போர்விமான விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுநல மனுவில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து அலகாபாத் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாந்தி பூஷண் ஆஜரானார். அதில் இந்திரா காந்தியின் வெற்றி ரத்து செய்யப்பட்டது.
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சாந்தி பூஷண், சிறிது காலம் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்பட்டார். உடல்நலம் குன்றியிருந்த சாந்தி பூஷண், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். சாந்தி பூஷணின் மகன்கள் ஜெயந்த் பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். சாந்தி பூஷணின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மோடி இரங்கல்
சாந்தி பூஷணின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘சட்டத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், பட்டியல் இனமக்களுக்காகப் பேசுவதில் உள்ள ஆர்வத்திற்காகவும் ஸ்ரீ சாந்தி பூஷண் ஜி நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி’ என்று பதிவிட்டுள்ளார்.