
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து கேரளா திரும்பிய அவர், பேசும் திறனையும் 90 சதவீதத்திற்கு மேல் இழந்திருந்தார். இதனால், உம்மன் சாண்டி அண்மைக்காலமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் அதிகம் பங்கேற்கவில்லை.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மேலும் மோசமடைய சிறப்பு சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் உடல் கேரளா கொண்டுச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டசபையில் அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் உம்மன் சாண்டி. தனது ஆஸ்தான தொகுதியான புதுப்பள்ளியை 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வரலாறு படைத்தவர். 51 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக எம்எல்ஏவாக காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை கேரளத்தின் முதல்வராக பதவி வகித்தவர் உம்மன் சாண்டி.
தனது 27 வயதில் 1970 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கிய அவர், அதன்பிறகு 11 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.