சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை - எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!

தருமபுரம் ஆதீன கர்த்தருடன் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள்
தருமபுரம் ஆதீன கர்த்தருடன் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள்

தமிழ்நாட்டில் பாஜக தான் எதிர்க்கட்சி என்று பாஜகவினர் திட்டமிட்டு மக்களிடம் தகவல் பரப்பி வரும் நிலையில் , அதற்கு அதிமுகவிலிருந்து தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பொன்னையன் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அதற்கு முன்வரை அடங்கிக் கிடந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது சுறுசுறுப்பு அடைந்திருக்கிறார்.

ஒவ்வொரு ஊராகச் சென்று, கட்சிக்காரர்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து திமுக அரசு போட்டுத் தாக்குகிறார். அதன் மூலம் தாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்காக இன்று மயிலாடுதுறை வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வழிபட்டபின் தருமபுரம் ஆதீனத்திற்கும் சென்றார். அங்கு ஆதீனகர்த்தரைச் சந்தித்து உரையாடி ஆசி பெற்றார். அதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'டெல்டா பாசன விவசாயிகளுக்கு வெள்ளக் காலங்களிலும், வறட்சி காலங்களிலும் நிவாரணமும், இழப்பீடும் வழங்கியது அதிமுக அரசு. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான கையெழுத்திட்டது திமுக. ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு. 50 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றது அதிமுக அரசு.

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லைத் திறந்தவெளியில் கொண்டுவந்து அடுக்கிவைத்து விற்பனை செய்ய முடியாமல் சேதமடைந்தது. கொள்முதல் செய்த நெல்லையும் அரசு முறையாக பாதுகாக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு செயலற்ற அரசாக இருந்துகொண்டு இருக்கிறது. விவசாயிகளிடம் முறையாக நெல்கொள்முதல் செய்யாதது கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழக அரசு தேவைக்கேற்ப உரங்களை வாங்கி கையிருப்பு வைக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தைப் பற்றி தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது. வீட்டைப் பற்றிதான் தெரியும். எல்லா மதத்தையும் சமமாகப் பார்க்க வேண்டும். மதத்திற்குள் யாரும் நுழையக்கூடாது. ஆண்டாண்டு காலமாக அவர்கள் வழிமுறையில் நாம் தலையிடக் கூடாது. கோியிலுக்கென்று சில வழிமுறைகள் இருக்கிறது. அதற்கென்று சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதற்கு முன் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் தருமை ஆதீனத்தில் பட்டினப் பிரவேசங்கள் நடைபெற்றுத்தான் வந்தன. 500 ஆண்டுகாலம் நடைபெற்ற அந்த இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு அதை தடை செய்ய முயற்சி செய்தது. அதைக் கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம். ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசாங்கம் மூக்கை நுழைக்க பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி படிக்க வேண்டுமென்று அதிமுக இத்திட்டத்தை கொண்டுவந்தது. திமுக அரசு அதனை முடக்க நினைத்தது. அதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் மீண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை. அவருக்கும், அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தில் ஆளும்கட்சியைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிதான். ஆனால், பிரதான எதிர்கட்சி அதிமுகதான். 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவை விட 3 சதவிகிதம்தான் அதிகம் வாக்குகளைப் பெற்றது. மற்றபடி அதிமுக தான் எப்போதுமே பலம் வாய்ந்த கட்சி" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in