காரைக்குடி அருகே பிரபல தொழில் அதிபர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வீட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நாளை(ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்வதை தடுக்கவும், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கவும் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக தமிழகம், புதுச்சேரியில் பறக்கும் படை அலுவலர்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, வாகனச்சோதனையைத் தீவிரப்படுத்தியதுடன், வீடுகளில் இருந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க திடீர் சோதனையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிரபல தொழிலதிபர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் பிரபல தொழில் அதிபர் பொன் பாஸ்கர் என்பவர் வீட்டில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. அத்துடன் பொன் பாஸ்கர் வீட்டில் 10 கிலோ அரிசி அடைத்த 350 மூட்டைகள் உள்ளதாகவும், இதை வக்காளர்களுக்கு வழங்குவதாகவும் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பிரபல தொழிலதிபர் பொன் பாஸ்கர் வீட்டில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனரான சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் வீட்டிலிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.