துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு: பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் திருமாவளவன்!

துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு: பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் திருமாவளவன்!

`மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகிய செயல்களில் ஈடுபடும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நவம்பர் 1-ம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `1956-ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் ஆண்டு மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வு மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை மென்மேலும் வலுப்பெற்று வருகின்றன. எனவே இந்நாளை மொழிவழி தேசிய உரிமை நாளாக கடைபிடிப்போம். மொழிவழி அடிப்படையிலான தேசிய உணர்வுகள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் ஒருபுறம் வலுவாக வளர்ந்து வருகிறது என்றாலும் டெல்லியில் ஒன்றிய அரசின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அத்தகைய மொழிவழி தேசியத்தையோ மாநில உரிமைகளையோ ஏற்கும் முதிர்ச்சியான ஜனநாயக போக்குகளை கொண்டிருப்பதில்லை.

மாறாக மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளை பறிப்பதிலும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதை தொடர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதன்படியே தற்போது பாஜக அரசும் மாநில உரிமைகளை பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாடு மாநிலமும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மொழிவழி தேசிய உரிமையை நாளான நவம்பர் 1-ம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றை கண்டித்து நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழ்நாடு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in