முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாவது நினைவு தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் அவருக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் திதி கொடுத்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதியன்று மறைந்தார். அவரது ஏழாவது நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் பெருமழை பெய்து வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில் சென்னையில் அதற்கான ஏற்பாடுகள் குறைவாகவே காணப்படுகிறது.
ஆனால் சென்னையில் இவ்வளவு மழை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், தனது வழக்கத்தை விடாமல் இன்று ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரது பிறந்த நாளில் திருக்கடையூர் சென்று ஆயுள் விருத்திக்காக ஹோமம் செய்து வழிபடுவது ஓ.எஸ்.மணியனின் வழக்கமாக இருந்தது.
அவர் உயிரிழந்த பிறகு பிறந்த நாளை பெரிதாக கொண்டாடுவதை கைவிட்டு அவருக்கு திதி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதன்படி இன்று வேதாரண்யம் சன்னதி கடலில் குளித்து நீராடி அதன் பின்னர் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்தார். கடந்த ஆறு ஆண்டுகளாகவும் அவர் இவ்வாறு திதி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.