ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வரும் 19-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழுக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 19-ம் தேதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட கருகல் பாளையம், சூரம்பட்டி, சம்பத் நகர், வீரப்பன் சத்திரம், அக்ரஹாரம் உள்ளிட்ட 5 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த பகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்றது. இந்த முறை அதே இடங்களில் கமல்ஹாசனை பிரச்சாரத்தை மேற்கொள்ள செய்து கணிசமான வாக்குகளை பெறுவதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.