டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து: ஆனாலும் ஈபிஎஸ்க்கு `செக்' வைத்தது உச்சநீதிமன்றம்

டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து: ஆனாலும் ஈபிஎஸ்க்கு `செக்' வைத்தது உச்சநீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி ஆதாயம் அடைந்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது. இதனால் 4,833 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுக் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டியதில்லை எனவும், இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in