
கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டுமென ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோடநாடு வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில் சிக்கி பலியானார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜின் சகோதரர் தனபால், ’’தனது சகோதரர் கனகராஜ் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்து வந்து சிலரிடம் கொடுத்தார். கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து, “தன்னை சந்தித்த போது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில் தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் தெரிவித்தார். கோடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை கனகராஜ் பையில் எடுத்து வந்தார்.
இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனகராஜ் தெரிவித்த நிலையில் தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார்.
கனகராஜ் இறந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இது குறித்து தெரிய வரும்’’ என கூறினார்.