வன்முறைக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்!

வன்முறைக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்!

ஒற்றைத் தலைமை கோஷம் மத்தியில் நடைபெற்ற பொதுக்குழுவிற்குப் பிறகு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல் முறையாக நாளை ஈபிஎஸ் செல்ல இருக்கிறார்.

அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சினைகளுக்கு மத்தியில், கடந்த ஜூலை 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் வெடித்து, கலவரமாக மாறியது. பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அன்றைய தினமே அதிமுக அலுவலகம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். இதனால் அப்போது எடப்பாடி பழனிசாமியால் தலைமை அலுவலகம் செல்ல முடியவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பினரும் நீதிமன்றப் படியேறி முறையிட்டாலும், ஈபிஎஸ் வசமே அதிமுக தலைமை அலுவலகம் வந்தது.

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக நான்கு வழக்குகள் பதியப்பட்டு, அந்த வழக்குகள் சிபிசிஐடி வசம் சென்றுள்ள நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் இன்று அதிமுக அலுவலகத்தில் நேரடி விசாரணை செய்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்குத் தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி வர இருக்கிறார். அதிமுக பொதுக்குழு நடைபெற்ற பிறகு அவர் தலைமை அலுவலகம் வருவது இதுவே முதல்முறை. இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு தடல் புடலாக வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in