அதிமுக அலுவலகத்தில் ரவுடிகளை அழைத்து வந்து கட்சியின் நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் தாக்கினார் என இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி புகார் கூறியுள்ளார்.
சென்னையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே இன்று ஏற்பட்ட மோதலில் பலரின் மண்டை உடைந்தது. இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன் பின் மருத்துவமனை வெளியே அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக் கூடும் என்று கூறி காவல்நிலையத்தில் மனு கொடுத்தோம். எனவே, அதிமுக தலைமை கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரினோம். ஆனால், காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால், அதிமுக அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அதிமுக கட்சியின் தலைவராக இருந்தவர், முன்னாள் துணை முதல்வராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவரே ரவுடிகளை அழைத்து வந்து கட்சியின் நிர்வாகிகளைத் தாக்கியுள்ளார். ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் இப்படி செய்யலாமா? நான்கு மீன்பாடி வண்டியில் கற்களைக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தினர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களும் அதிமுக தொண்டர்களையே தாக்கியுள்ளனர். ரவுடிகளைத் தாக்கவில்லை. காவலர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஓ. பன்னீர்செல்வம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காலம் மாறும்போது தக்க பாடம் புகட்டுவோம்” என்று அவர் கூறினார்.