ஈபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் மீண்டும் களமிறங்கினார் ஓபிஎஸ்!

ஈபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் மீண்டும் களமிறங்கினார் ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க கோரி ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றது. நீண்ட விசாரணைக்கு பிறகு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டமும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பளித்தது. ஜூலை 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ். இதனை ஈபிஎஸ் தரப்பு நிராகரித்ததோடு, தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், "கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் தலையிடுவதாகவுள்ளது. கட்சி ஒற்றைத்தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டைத்தலைமை வேண்டும் என்ற ஒரு தனிநபரின் விருப்பத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. உட்கட்சி செயல்பாடு குறித்து நீதிபதி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டது அல்ல.

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23-ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளார். இது மனுவில் கேட்கப்படாத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக தீர்ப்பு வழங்கி உள்ளார். இதற்காகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2,460 உறுப்பினர்கள் கலந்து கொண்டது, எழுத்து பூர்வமான நோட்டீஸ் அளிக்க வேண்டியது இல்லை என்ற கட்சி விதி குறித்து, பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது என்பன போன்ற முக்கிய விவரங்களைப் புறக்கணித்து தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, அந்த வழக்கு செல்லாததாகிவிட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். ஒற்றைத்தலைமை வேண்டும் என திடீரென முடிவெடுக்கவில்லை. இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in