
``சட்டமன்றத்தில் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓபிஎஸ் சொன்னார். ஆனால் 2 மணி நேரம் கமலாலயத்தில் கார் இருந்தது என்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துகிடக்கிறார்கள்'' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் 6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரிலான சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைத்தும், 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.
வாழ்த்துரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ``நேரு ஸ்டேடியம் கட்டும்போது அப்புறப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் கண்ணப்பர் திடலில் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தமிழும் கலைஞரும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல வேண்டும் என வாழ்த்துவார்கள். ஆனால் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.
என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் காரில் ஏறச் சென்றார்கள். ஆனால் அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன். ஆனால் சட்டமன்றத்தில் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால் நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில் தான் இருந்தது.
இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள். கேடுகெட்ட வெட்கமில்லாத ஒரு எதிர்க்கட்சியாக அதிமுகவினர் உள்ளார்கள். இதற்கு மேல் நான் பேசவில்லை'' என கிண்டல் செய்தார்.