அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 8 மணி நேரம் விசாரணை: 14 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 8 மணி நேரம் விசாரணை: 14 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2006-ம் ஆண்டு தமிழக காவல்துறை உளவுப்பிரிவு ஐ.ஜி-யாக இருந்த ஜாஃபர் சேட், தனக்கு வழங்கப்பட்ட வீட்டுவசதி வாரிய மனையை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஜாஃபர் சேட்-க்கு வீட்டுவசதி வாரிய மனையை ஒதுக்கிய விவகாரத்தில் அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீதும் குற்றசாட்டப்பட்டது. ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகக் கூறி தற்பொழுது அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வசதி வாரியத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முறைகேடாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும், வீட்டு மனையை ஜாஃபர் சேட் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் ஜாஃபர் சேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் ஐ.பி.எஸ் அதிகாரியான தன் மீது மத்திய அரசின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி ஜாஃபர் சேட் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் ஜாஃபர் சேட் மீதான் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறும், அவருக்கு உரிய பதவியை மீண்டும் வழங்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2021-ம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை டி.ஜி.பி-யாக இருந்த ஜாஃபர் சேட் பணி ஓய்வு பெற்ற நிலையில், 2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீட்டு வசதிவாரியத்தில் ஜாஃபர் சேட்டுக்கு வீட்டுமனை ஒத்துக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகக் கூறி அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக வழக்கு சம்மந்தப்பட்ட பல்வேறு ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாஃபர் சேட்டுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து கடந்த ஜூன் 20-ம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாஃபர் சேட் விசாரணைக்கு ஆஜரானார். அதேபோல் வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரத்தில் அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கும், வீட்டுவசதித்துறை பெண் உதவி இயக்குநருக்கும், அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பிய நிலையில் அன்றையதினம் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

எனவே அவர்கள் இருவருக்கும் மீண்டும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியதை அடுத்து நேற்று 12.30 மணியளவில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பெண் அதிகாரி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். சில மணிநேரம் பெண் அதிகாரியிடம் விசாரணை முடிந்து அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சட்டத்துக்கு கட்டுப்பட்டு விசாரணைக்காக இன்று ஆஜரானேன். விசாரணை அணுகுமுறை பற்றி எந்த கவலையும் இல்லை. நான் உறுதியாக உள்ளேன். 2008-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது விசாரணை நடத்துகிறார்கள். எனக்கு சென்னையில் ஒரு சதுர அடி நிலம் கூட இல்லை. நான் சட்டவிரோதமான எந்த செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை. அடுத்தகட்டமாக விசாரணை எப்போது நடக்கும் என்பது தற்போது கூற முடியாது. எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன். நீதிமன்றத்தில் சந்திப்போம். சட்டத்துக்கு உட்பட்டுதான் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதே தவிர யாருக்கும் எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை" என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in