
ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கடற்கரையில் இறங்கிய போது அவரது காலணிகளை ஊழியர் ஒருவர் வைத்திருந்த புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் அமைச்சர் ரோஜாவின் செயலுக்குப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவரது கணவர் செல்வமணி தமிழில் பிரபலமான இயக்குநராவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ரோஜா, ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். இதனால் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரானார்.
இந்த நிலையில், அமைச்சர் ரோஜா ஆந்திரா மாநிலம், பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்குச் சென்றார். அப்போது அவர் கடற்கரை மணலில் நடந்ததோடு, கடல் நீரில் கால் நனைத்து மகிழ்ந்தார். அப்போது ரோஜாவின் காலணிகளை ஊழியர் ஒருவர் எடுத்து பத்திரமாக கைகளில் வைத்திருந்தார். இது தொடர்பான புகைப்படம், வீடியோ தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. ரோஜாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சூர்யலங்கா கடற்கரைக்குச் சென்ற அமைச்சர் ரோஜா, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். மேலும், பாபட்லா சூர்யலங்கா கடற்கரை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குவதாகவும், இந்தக் கடற்கரையைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது என்று கூறினார்.