"ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம். கண்டிப்பாக வந்து மின் இணைப்பு பெற்றவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும்" என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மின் கணக்கு இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் பலர் தங்கள் மின் கணக்கு இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். பல இடங்களில் சிரமம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் மின்சார வாரியத்தின் இணையதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கோவையில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பொது மக்களுக்கு உதவிகளை வழங்கிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம். மின்துறை சீர்திருத்தங்களுக்கு ஆதார் இணைப்பு மிகவும் அவசியம். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண் கொடுப்பது நல்லது.
ஆனால் கண்டிப்பாக வந்து மின் இணைப்பு பெற்றவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும். சில இடங்களில் மின் இணைப்பு பெற்றவர்கள் இறந்திருக்கலாம். அதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் முதல்வரின் அனுமதி பெற்று நடைபெற இருக்கின்றன. தங்களுடைய மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன" என்றார்.