நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதமலை கிராமத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை தலைச்சுமையாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தேர்தல் பணியாளர்கள் சுமந்து சென்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலிருந்தும் அந்தந்த மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதமலை கிராமத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்பட்ட போதமலை கிராமம் அடிவாரத்தில் இருந்து சுமார் 1,100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், 12 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக நடந்து தான் செல்ல வேண்டும்.
கீழூர், கெடமலை, மேலூர் என மூன்று கிராமங்களை உள்ளடக்கிய இந்த போதமலையில், சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 428 ஆண் வாக்காளர்கள் மற்றும் 417 பெண் வாக்காளர்கள் என 845 பேர் வாக்காளர்களாக உள்ளனர். சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்திற்கு, முந்தைய காலத்தில் கழுதையின் மேல் வாக்குப் பெட்டிகளை வைத்து எடுத்து செல்வது வழக்கமாக இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகைக்கு பிறகு கழுதைகளை பயன்படுத்துவதில்லை. இப்போது வருவாய் துறை ஊழியர்கள் மூலம் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இங்கு கீழூர், கெடமலை என இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மண்டல அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தேர்தல் பணியாளர்கள் வனத்துறை ஊழியர்கள் உட்பட 9 பேர் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை வாக்குப் பெட்டிகள் சகிதம் மலையேறத் துவங்கினர்.
சுமார் 3 மணி நேரம் பயணித்து மலை உச்சியை அடைய முடியும் என்பதால், தேர்தலுக்கு முந்தைய நாளே இவர்கள் கிளம்பியுள்ளனர். இன்று வாக்குச்சாவடி மையத்திலேயே தங்கும் இவர்கள், வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் அடிவாரத்துக்கு திரும்புவார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!
குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!
ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!