
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். மத அடிப்படையில் வாக்கு கேட்ட காரணத்துக்காக மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தியிருக்கிறார்.
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே இரு முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது. அயோத்தி ராமர் கோயில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் பெரும் பங்கு வகிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மத்தியப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திலும் ராமர் கோயில் எதிரொலித்துள்ளது.
அம்மாநிலம் குனாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு அயோத்தி ராமர் கோயிலில் இலவசமாக தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அனைத்து கோயில்களிலுமே பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள முடியும் என்றபோது, எப்படி அமித் ஷா இதுபோன்ற வாக்குறுதியை அளிக்கிறார் எனவும், ராமர் கோயிலை தேர்தல் அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது எனவும் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் ராமரை தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, “அமித் ஷா மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு இலவசமாக ராமர் கோயில் தரிசனம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்காக தேர்தல் விதிகள் மாற்றப்பட்டுள்ளதா” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்