இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை விமர்சிக்கும் வகையில் கடந்த 4-ம் தேதி கர்நாடக பாஜகவின் எக்ஸ் தளத்தில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கே ஆதரவாக உள்ளதாக குறிப்பிட்டு அந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பாஜக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி காவல் துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கலவரத்தைத் தூண்டி பகையை வளர்க்க பாஜக விரும்புவதாக தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்தநிலையில் சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்குமாறு கர்நாடக பாஜகவுக்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், அந்த பதிவு பாஜக தரப்பால் நீக்கப்படவில்லை. அதனால் கர்நாடக பாஜகவின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ‘எக்ஸ்’ தளத்திற்கு தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.