ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று மீண்டும் அவுரங்காபாத்தின் பெயரை சம்பாஜிநகர் என்று மாற்றியுள்ளார்.
இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே, அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் எனவும், உஸ்மானாபாத்தை தாராசிவ் எனவும், நவி மும்பை விமான நிலையத்தின் பெயரை டிபி பாட்டீல் விமான நிலையம் என்றும் மாற்றியுள்ளார்.
ஏற்கெனவே ஜூன் 29 அன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை, சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜியின் பெயரில் அவுரங்காபாத்தின் பெயரை சம்பாஜிநகர் என மாற்றுவதாக அறிவித்தார். மேலும் உஸ்மானாபாத்தின் பெயரை தாராசிவ் எனவும் மாற்றினார். அதன்பின்னர் சில மணி நேரம் கழித்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
நகரங்களின் பெயர்களை மீண்டும் மாற்றியது குறித்து பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, " மகா விகாஸ் அகாடி அரசாங்கம் ஔரங்காபாத்தை சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றும் முடிவை அதன் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்தது. அப்போது அது சிறுபான்மை அரசாங்கமாக இருந்தது. அத்தகைய நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவது சட்டவிரோதமானது. எனவே தற்போது சட்டரீதியாக ஊர்களின் பெயர்களை மாற்றியுள்ளோம்" என்று தெரிவித்தார்.