
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்குகளுக்கு பதில் அளிக்குமாறு இரு தரப்பினருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி குமரேஷ்பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில், கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல் தங்களை நீக்கியுள்ளதாகவும், விதிகளின்படி தங்கள் தரப்பு விளக்கம் கேட்காமல் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இருவரையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் 20-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற தங்களை கட்சி சாராத உறுப்பினராக கருதாமல், அதிமுக எம்.எல்.ஏ.க்களாகவே அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்றும் கூறப்பட்டது.
மனோஜ் பாண்டியன் தரப்பில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் என பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், மனோஜ் பாண்டியன் வழக்கில், ஜூலை 11 தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது என சுட்டிக்காட்டப்பட்டது.
அதையடுத்து மனோஜ்பாண்டியன் தாக்கல் செய்த வழக்கில், தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதி, வைத்தியலிங்கம், பிரபாகர் மனுக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதிலளிக்கவும், எடப்பாடி பழனிசாமி பதில் மனுவுக்கு மனோஜ் பாண்டியன் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.