‘நிதி இல்லாத நிலையில் 80 கோடியில் பேனா சிலை தேவையா?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி

ஓபிஎஸ் குறித்தும் கடும் கண்டனம்
கிரேன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை
கிரேன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை

தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் கருணாநிதியின் பேனாவுக்காக 80 கோடி ரூபாயில் சிலை தேவையா எனத் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு கிரேன் மூலம் பெரிய அளவிலான மாலை அணிவிக்கப்பட்டது. அதே பாணியில் திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கும் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் குமார் கிரேன் மூலமாக மிகப்பெரிய மாலையை அணிவித்து வரவேற்பளித்தார்.

வரவேற்பு முடிந்த பின்னர் விமான நிலையம் எதிரே வயர்லெஸ் சாலையில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் திமுக அரசையும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்சையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

கூட்டத்தில் பேசும் ஈபிஎஸ்
கூட்டத்தில் பேசும் ஈபிஎஸ்

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஒரு இயக்கம். அதிமுக-வைப் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கினார். புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்டிக் காத்தார். இந்த இரண்டு பேரும் முதலமைச்சராக இருந்தபோது ஆட்சியில் அடித்தளமிட்ட திட்டங்களால்தான் தமிழகம் இன்று சிறப்பாக உள்ளது. தமிழகம் ஒளிமயமாக மின்னிக்கொண்டு இருந்தது.

விடியா திமுக அரசு ஸ்டாலின் தலைமையில் பதவி ஏற்றதும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்துகிறது. தவிர ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டங்கள் பலவற்றை முடக்கிவிட்டார்கள். இதுதான் இந்த விடியா அரசின் சாதனை.

15 மாத கால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று மக்கள் ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் நிதி இல்லை என்கிறார். நிதியில்லை என்று தெரிந்துதானே நீங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசினீர்கள்? நிதியில்லாத இந்த நேரத்தில் கருணாநிதியின் பேனாவிற்கு 80 கோடி ரூபாயில் சிலை வைக்க வேண்டுமா? எழுதாத பேனாவிற்கு 80 கோடியில் சிலை எதற்கு என்று மக்கள் கேட்கிறார்கள். ஒரு கோடியில் வைத்தால் போதாதா? இந்த 80 கோடியைக் கொண்டு ஆறரை கோடி தமிழ் மக்களுக்கும் பேனா வாங்கிக் கொடுக்கலாமே?

ஈபிஎஸ்சுக்கு வரவேற்பு
ஈபிஎஸ்சுக்கு வரவேற்பு

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. அதில் மிக முக்கியமானது. மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய். இதுவரை தரவில்லை. பெண்கள் உரிமையுடன் உரிமைத்தொகை என்ன ஆனது என கேட்கிறார்கள். அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டார்கள்.

அதிமுக என்பது எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட மக்கள் இயக்கம். அதனை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. அவருக்கு (ஓபிஎஸ்) நாங்கள் உயர்ந்த பதவி கொடுத்து அழகு பார்த்தோம். அவர் அதிமுக-வுடன் இணைந்தபோது 10 சதவீதப் பொதுக்குழு உறுப்பினர்களும் 10 எம்எல்ஏ-க்களும் தான் அவருடன் இருந்தார்கள். அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தோம். அதற்கு முன் அவர் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சர் ஆகவும் பணியாற்றி இருந்திருக்கிறார். ஆனால் அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

கட்சிப் பதவியை வியாபாரமாகக் கருதினார். அவரிடம் துரோக மனப்பான்மைதான் உள்ளது. அதிமுக தலைமை நிலைய அலுவலகத்தை டெம்போ வேனில் வந்து உடைத்தார். அம்மா இருந்த அறையை அடித்து நொறுக்கினார். இப்படி கட்சிக்கு துரோகம் செய்தவருடன் எப்படி இணைந்து பணியாற்ற முடியும்? அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இல்லாத ஒருவருடன் இணைய முடியுமா?

கட்சிக்கு யார் விசுவாசமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நான் 1974 முதல் அடிபிறழாமல் அதிமுக-வில் தொண்டனாக இருந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் ஓபிஎஸ் அப்படி அல்ல. ஜெயலிதா போடி தொகுதியில் போட்டியிட்டபோது வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாகப் பணியாற்றியவர் ஓ.பன்னீர்செல்வம். அதனால்தான் தொண்டர்கள் அவர் செய்தது துரோகம் என்கிறார்கள். அவர் திமுக-வுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு திட்டமிட்டு அதிமுக-வை அழிக்கப் பார்க்கிறார். எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுக-வை அசைக்கக்கூட முடியாது" என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் , அதிமுக அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்.பி. குமார் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி, மாநகர் மாவட்டத்தின் சார்பில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in